வால்பாறையில் கொடூரம்: சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்ற சம்பவம் – உடல் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்லிகுமாரியை, சிறுத்தை கவ்விச் சென்றது. சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஓடி வருவதற்குள், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்து சென்றது.

சிறிது தூரத்தில் சிறுமியின் ஆடைகள் மட்டும் கிடைத்தது. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது, சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.

சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்; வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Share This Article